நேரலை நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்பட்ட அக்தர் - கொந்தளிக்கும் ரசிகர்கள்
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்பட்டதால் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாதியில் வெளியேறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உலகிலேயே வேகமாக பந்துவீசக் கூடியவர் என்பதால் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுவார். தற்போது துபாயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா, நியூசிலாந்து என தனது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்துடன் மோதியது. இந்த போட்டி குறித்த நிகழ்ச்சி ஒன்று பாகிஸ்தான் தேசிய ஊடகமான பிடிவியில் நேரலையாக நடந்து கொண்டிருந்தது. போட்டி முடிந்த பின்னர் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பிரபலங்களான முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் அக்தர், உமர் குல், ரஷித் லத்திஃப், ஆகுப் ஜாவேத், ஜாம்பவான்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியை நவுமன் நியாஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது நெறியாளர் நவுமன் நியாஸுக்கும், சோயிப் அக்தருக்கும் இடையே ஒரு கேள்வி தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இதில் நெறியாளர், சோயிப் அக்தரை பாதிலேயே வெளியேறுமாறு கூறினார். இதனால் அங்கிருந்த பிரபலங்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சோயிப் அக்தர் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதாவது நெறியாளர் நவுமன் நியூசிலாந்து உடனான போட்டி குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். அக்தர் அந்த கேள்விக்கு பதிலாக அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர் ஹரிஸ் ரஃவுப்பை புகழ்ந்து பேசினார். உடனடியாக நெறியாளர் நவுமன் பாதியில் குறுக்கிட்டு சோயிப்பை பார்த்து நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். இதைக் கூற நான் விரும்பவில்லை, இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்தார்.
பின்னர் சோயிப் அக்தர் தனது மைக்கை கழற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். தான் வெளியேறும் முன்பாக அங்கிருந்த சக பிரபலங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நான் நேரலை நிகழ்ச்சியில் இந்த தேசத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன், பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்வதாகவும் அக்தர் கூறிச்சென்றார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.