“இந்த வசதி மட்டும் அப்போ இருந்திருந்தா சச்சின் ஒரு லட்சம் ரன்கள் எடுத்திருப்பார்” - சோயிப் அக்தர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
சச்சினின் இந்த சாதனையை கோலி உள்ளிட்ட வீரர்கள் கடந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய விதிகள் காரணமாக தான் இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் ரன்களை வாரி கொடுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்த்ரியுடன் அவர் நடத்திய உரையாடலில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
“இப்போது இருக்கும் ஒரு இன்னிங்சில் 3 டி.ஆர்.எஸ். விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார் சோயிப்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது புதியதாக 2 பந்துகள் வழங்கப்படுகிறது. . இது பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விசயம், ரிவர்ஸ் ஸ்விங் என்ற முறையே தற்போது ஒருநாள் போட்டியில் இல்லை.
3 ரிவியூ தருகிறார். ஃபில்டிங் முறையில் மாற்றம் என பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிகளாக அமைந்துள்ளது” எனவும் குற்றச்சாட்டினார்.
மேலும், “சச்சினை நினைத்து தாம் மிகவும் பரிதாப படுகிறேன். சச்சின் அவரது காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்,, பிரட் லீ, வார்னே, முரளிதரன், நான் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்.
அதனால் தான் சச்சினை எப்போதும் சிறந்த வீரர் என்று குறிப்பிடுவேன். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.