மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்யவைத்த எம்.பி - என்ன காரணம்?

Maharashtra
By Sumathi Oct 04, 2023 08:40 AM GMT
Report

டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோயாளிகள் இறப்பு

மகாராஷ்டிரா, நான்டெட் பகுதியில் உள்ள ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 31 நோயாளிகள் இறப்பு நேர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்யவைத்த எம்.பி - என்ன காரணம்? | Shiv Sena Mp Asked Govt Hospital Dean Clean Toilet

இந்நிலையில், சிவ சேனா எம்பி, தற்காலிக டீன் வகோடேவை அரசு மருத்துவமனையின் அசுத்தமான கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்கும் அறைகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

சர்ச்சை சம்பவம் 

டீனிடம் துடைப்பத்தைக் கொடுத்து கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் பாட்டீல், இங்கு ஒரு சிறிய தண்ணீர் கோப்பை கூட இல்லை. ஆனால் கழிவறையைப் பயன்படுத்தாதவர்களை நீங்கள் திட்டுகிறீர்கள். உங்கள் வீட்டிலும் இப்படிதான் நடந்து கொள்வீர்களா என கேட்பதும் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினைச் சேர்ந்த எம்.பி., ஹேமந்த் பாட்டீல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா எம்.பி., "அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது.

ஆனால் அரசு மருத்துவமனையில் உள்ள சூழலைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். கழிவறைகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. மருத்துவமனை வார்டுகளில் இருக்கும் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன. தண்ணீரும் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.