நாடு திரும்பிய பிரபல வீரர்..ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு
ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஹெட்மயர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை 55 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மும்பை அணி தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. இதற்கு அடுத்தப்படியாக சென்னை அணி வெளியேறும் நிலையில் உள்ளது. குஜராத், லக்னோ தங்களுடைய பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் மீதமுள்ள 2 இடங்களுக்கு ராஜஸ்தான், ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
இதில் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே அந்த அணியில் விளையாடி வந்த வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மயர் 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்து ராஜஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றார். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்பார்ப்பதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.