மனைவியை பிரிந்தார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் - சோகத்தில் ரசிகர்கள்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள தகவல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷாவை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஹர்பஜன் சிங்கின் நண்பர் வட்டத்தில் இருந்த அவரை ஷிகர் தவான் பேஸ்புக்கில் முதல் முறையாக பார்த்து காதலித்தார்.
ஆனால் ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அவரின் முதல் கணவரை பிரிந்து தவானை நீண்ட போராட்டத்திற்கு பின் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். இதனிடையே ‘ஆயிஷா தவான்’ என்ற அவருடைய தனிப்பட்ட சமூக ஊடக கணக்கும் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என இருமுறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன்.
முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன். சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.
இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன். விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும்.
நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து. நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து. ஒரு உறவை முறிக்க முடியாமல் பயப்படுகிறீர்களா அல்லது சிரமத்தை அனுபவிக்கிறீர்களா எனக்கு தனி செய்தி அனுப்புங்கள் என அவர் மிகவும் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். ஆனால் இதனை ஷிகர் தவான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.