"சாதிக் கலவரங்களில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார்" - சரத் பவார் கடும் தாக்கு
கடந்த வாரம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வடமேற்கு டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இதில் காவல்துரையினர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு அதிரடியாக தகர்த்தது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மேற்கு மராட்டியத்தில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரணியில் இது குறித்து பேசுகையில்,
“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதிக் கலவரங்களில் இருந்து டெல்லியை பாதுகாக்க தவறிவிட்டார். டெல்லி முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கையில் உள்ளது.
டெல்லியில் ஏதாவது நடந்தால் அது உலகம் அறியக்கூடிய செய்தியாக மாறும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறெல்லாம் நடந்தால் டெல்லியில் அமைதி இன்றி இருப்பதாக உலகம் கற்பனை செய்து விடும்.
டெல்லியை ஒருங்கிணைத்து, பிரிக்கப்படாமல் வைத்திருக்க அமித் ஷா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார். உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் டெல்லியை கையாள முடியாது.
காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் ஒரு படம் மத வெறுப்பை தூண்டும் வகையில் அனைவருக்கும் காட்டப்பட்டது. இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தைப் பார்த்தேன்.
பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தால் (அப்போது), அவர்கள் டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா என்று செல்வார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. அவர்கள் (தலைவர்கள்) இந்தியாவுக்கு வந்தால் குஜராத்திற்கு தான் வருகிறார்கள்.