இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி? பெயரை பரிந்துரைத்தார் எஸ்.ஏ.பாப்டே
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாகப் பொறுப்பெற்றிருந்தார்.
தற்போது பாப்டேவின் பதவிக்காலம் இந்தாண்டு ஏப்ரல் 23ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இன்னும் முழுவதாக ஒரு மாத காலமே இருப்பதால் அடுத்த நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு நீதிமன்ற வட்டாரங்களிலும் மத்திய அரசு தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
யாரை அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கலாம் என்ற கேள்வி அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பாப்டேவுக்கு அடுத்து இருப்பவர் நீதிபதி ரமணா தான். தற்போது இவரின் பெயரை பாப்டே பரிந்துரைத்துள்ளார். கிட்டத்தட்ட ரமணா தலைமை நீதிபதியாவது உறுதியாகி இருக்கிறது. 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்த நீதிபதி ரமணாவின் பதவிக் காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரையில் இருக்கிறது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரமணாவின் தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி பாப்டேவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார். அதனை பாப்டே நிராகரித்தார்.

தலைமை நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டால், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதியாக இருப்பார். ரமணா ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். போப்டேவின் பரிந்துரை ஏற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்படுவார்.