ரோகித்துக்கு பிறகு இந்திய அணி கேப்டன் இவர் தான் - பிரபல முன்னாள் வீரரின் கருத்தால் பரபரப்பு
ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணி கேப்டனாக யார் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே கணித்துள்ளார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இந்த தொடருக்கு முன்பாக ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவர் விலக ஒருநாள் தொடரின் தற்காலிக கேப்டனாக கே.எல்.ராகுல் பதவி வகித்தார். ரோகித்சர்மா வந்து விட்டால் ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும்.
இதனிடையே ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வருடங்கள் கேப்டன் பொறுப்பு வகித்த பிறகு இந்திய அணியில் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு இன்னும் கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லை என பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் பும்ராவை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வளர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் அனுபவம் மிக்க வீரராக தெரிந்தார். ஆனால் அவரது கேப்டன் பொறுப்பு போதிய அளவில் இல்லை. ரோகித் சர்மாவும் அடிக்கடி காயம் காரணமாக வெளியேறிவிடுகிறார். ரோகித் சர்மா வந்துவிட்டால் துணை கேப்டன் பொறுப்பு பும்ராவிற்கு கொடுக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கின்றன. ரோகித் சர்மா 2 வருடங்கள் குறைந்தபட்சம் கேப்டன் பொறுப்பில் இருப்பார். அதற்குள் பும்ரா நிறைய அனுபவங்களை பெற்று விடுவார். அவரிடம் ஆக்ரோஷமும் இருக்கிறது. இது அணியின் எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்கும். ஆகையால் அடுத்த கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் அவரை வளர்த்துவிடுவது சரியான முடிவாக இருக்கும்.
விராட் கோலி போன்ற வீரர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினால், எத்தகைய தடுமாற்றத்தை ஒரு அணி சந்திக்க நேரிடும் என தெளிவாக தெரிந்துவிட்டது. மீண்டும் அதே தவறை பிசிசிஐ செய்துவிடக்கூடாது. ஆகையால் இளம் வீரர்களை விரைவாக கேப்டன் பொறுப்பிற்கு கொண்டுவந்து திறமைகளை வளர்த்து விட வேண்டும் என்றும் வார்னே தெரிவித்துள்ளார்.