மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் உடற்கூறு ஆய்வு இன்று தாய்லாந்தில் செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் 52 வயதான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் காலமானார்.
இந்த தகவல் கிரிக்கெட் உலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த ஷேன் வார்னேவை மாலை 6 மணியளவில் ‘தாய் சர்வதேச மருத்துவமனைக்கு’ கொண்டு சென்றனர்.
அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கை கொடுக்காமல் போனதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வார்னேவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தாய்லாந்தில் உள்ள சூரத் தானிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர், ஆஸ்திரேலியாவில் அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அவருடைய உடலை தாய்லாந்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் ஷேன் வார்னே உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.