பிரபல கிரிக்கெட் வீரரின் குடும்பம் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப்-அல்-ஹசனின் குடும்பத்தினர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது.
இதனிடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேசம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய சாதனையைப் படைத்தது.
அந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சரித்திரம் படைக்க வங்கதேசம் தயாராகி வருகிறது. இந்நிலையில் வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது ஷகிப்-அல்-ஹசனின் குடும்பத்தில் அவரது தாய், குழந்தை போன்ற ஒரு சில நபர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா தொடரை பாதியில் ரத்து செய்துவிட்டு அவர் உடனடியாக நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் சாதனைப் படைக்க அந்த அணி தயாராக இருந்தாலும் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் குடும்பத்தினரை பார்க்க ஷகிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 3வது ஒருநாள் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்ப ஷகிப் அல் ஹசன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.