இந்தியாவுக்கு சென்று விளையாடுவோம்... - பாக். முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி அந்தர் பல்டி...!

Cricket Pakistan Pakistan national cricket team
By Nandhini Feb 20, 2023 11:02 AM GMT
Report

இந்தியாவுக்கு சென்று விளையாடுவோம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம்

இதனையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தியது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்தது. இதனால், கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

நரகத்துக்குதான் செல்ல வேண்டும்

சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட், ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது எதற்காக? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்போல.

விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகின்றார்கள். பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

shahid-afridi-pakistan-national-cricket-team

சாகித் அப்ரிடி சூசகம்

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு ஐசிசி மூலம் கிடைக்கும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டு விடும். அப்படி நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி பேசுகையில்,

"சொந்த காலில் எந்தவித பிரச்சினையுமின்றி நிற்ககூடியவர்களால் தான் தைரியமான முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில் இந்தியா தன்னை பலமான வாரியமாக மாற்றிக்கொண்டது. இதனால்தான் ரொம்ப தைரியமாக அறிவித்து வருகிறார்கள்.

ஆனால் நிதி நிலைமை குறித்த விவகாரத்தில் பாகிஸ்தான் சற்று யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஐசிசி கட்டாயம் தலையிட்டாக வேண்டும். ஆனால் பிசிசிஐ-க்கு எதிராக ஐசிசி எந்தவொரு முடிவை எடுத்துவிடாது.

எனவே, இவ்விஷயத்தில் மிக அழுத்தமான முடிவை எடுப்பது அவசியம். உணர்ச்சிப்பூர்வமாக யோசித்தால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செல்லக்கூடாது என்று நான் கூட கூறுவேன். ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை நாம் பார்க்க வேண்டும். அதனால், யோசித்து பார்த்தால் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்பது தெரியும் என்று தெரிவித்தார்.