ஓடும் ரயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை - கைதான ஐ.டி.இளைஞர்
ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு விரிவு அண்ணா நகரை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பெங்களூருவில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்வுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி கொண்டிருந்தார்.
ரயிலில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்டபோது அவரை இளைஞர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்நிலையில் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தவுடன் அங்குள்ள ரயில்வே போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் புகார் மனு ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு போலீசார் அந்த இளைஞரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் கந்தன் என்பதும், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கந்தன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.