தொடர் பாலியல் புகார்கள்..அத்துமீறும் ஆசிரியர்கள்..அரசின் நடவடிக்கைகள் என்ன? ஓர் விரிவான செய்தி தொகுப்பு..
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகி மீதான பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.பள்ளி முதல் கல்லுாரி வரை மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர்.
சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராஜகோபாலனுக்கு எதிராக புகார் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது சில தினங்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில்,தடகளப்பயிற்சியாளர் நாகராஜனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல முன்னாள் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீதும் புகார் எழுந்தது. அங்கு 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் எடுத்து வரும் ஆசிரியர் ஆனந்த் மீதுதான் மாணவிகள் புகார் கூறியிருந்தனர். மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை கீழ்பாக்கம் போலீசார், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்து சிறையில் அடைக்கப்படார்.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பின.ஆன்மிகவாதி, மக்களுக்கு உதவி செய்பவர் மற்றும் ஒழுக்கத்தின் சிகரம் என பல பட்டங்களுடன் உல்லாசமாக இருந்து வந்த சிவசங்கர் பாபா தனது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டள்ளார் என்ற திடுக்கிடும் புகார்களை மாணவிகள் அளித்தனர். இதனையடுத்து மாணவிகளை தன் ஆசைக்கு இணங்க வைத்தாக குற்றச்சாட்டும் எழுந்தது.இதற்கு உதவியாக இருந்த சிவசங்கர் பாபாவின் ஆசிரம உதவியாளரான பெண் ஒருவர் மாணவிகளை கட்டாயபடுத்தி சிவசங்கர் பாபாவின் அறைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.
மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர் சிபிசிஐடி போலீசார்.இதனையடுத்து அவருக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்துார் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிவாசல் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப்.இவர் தனது வகுப்பில் பயிலும் மாணவிகளை பெற்றோர் இல்லாத நேரங்களில் தொடர்பு கொண்டு சபலத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் ரைவலானது.
அந்த ஆடியோவில்,உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் எனவும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார் ஹபீப்.
ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து இது குறித்து ராமநாதபுரம் ஏடிஎஸ்பி தலைமையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி தீவிரமாக விசாரணை மேற்கொண்டதை அடுத்து ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது மாணவிகள் 5 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கல்லுாரி முதல்வருக்கு புகார் கடிதம் அளித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில்.பால் சந்திரமோகன் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் அந்தக் கடிதத்தில், `அதே தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, "பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்" என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி, தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க ஒரு குழுவையும் நியமிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். "இவ்விவகாரம் சம்பந்தமாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு குறித்து முடிவு செய்யப்படும்" என்று காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய மண்டல ஐஜி வே. பாலகிருஷ்ணன் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவித்திருந்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போா் மீது வரக்கூடிய புகாா்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் தாக்கத்தால் பள்ளி,கல்லுாரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்,இணைய வழியாக மாணவ,மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மீண்டும் பள்ளிகள்,கல்லுாரிகள் திறக்கப்பட்டால் மாணவிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக அரசு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி,மற்றும் கல்லுாரிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி அவற்றை கண்காணிக்க தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பெற்றோர்களும்,சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி பிரிவு,IBC தமிழ்நாடு.
https://youtu.be/wdcChqClr8w