கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன்- அமைச்சர் சி.விஜய்பாஸ்கர்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை, விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.
விராலிமலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் மக்கள் மத்தியில் பேசும்போது, ''கஜா புயலின்போது, கதவைத் தட்டி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டது உங்கள் தம்பி விஜயபாஸ்கர். அதேபோல கரோனா காலத்தில் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி என்ன உதவி வேண்டும் என்று கேட்டதும் உங்கள் தம்பி விஜயபாஸ்கர்தான்.
மக்கள் அனைவரும் நமக்கு வேண்டியவர்கள். அவர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவருக்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்தக் கடினமான நேரத்தில் உங்களுடன் நின்றது உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபாஸ்கர். தமிழ்நாட்டிலேயே எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் கூடச் சொல்லாமல் பிரச்சாரம் செய்வது உங்கள் விஜயபாஸ்கர்தான்.
ஆனால், என்னை எவ்வளவு கரித்துக் கொட்ட முடியுமோ அவ்வளவு செய்கின்றனர்.
என் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை மக்களுக்கு உதவி செய்வேன், கொடுப்பேன், உதவிக்கொண்டே இருப்பேன். எனக்கு மனது இருக்கிறது, அதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.