அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றிய நீதிபதிகள்
செந்தில் பாலாஜி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.
அமைச்சர் கைது
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மேலும் அவர் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் எனும் வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
நீதிமன்றத்திற்கு மாற்றம்
செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை இருவேறு அமைச்சர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஆகியவை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு தடை விதித்தும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இதே போன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் , இந்த வழக்கையும் அதோனோடு சேர்த்து விசாரிக்க கூறி, சண்முகசுந்தரம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.