தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதை தவிர தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
அதன்படி, 24,805 டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16.67 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் குறிப்பிட்டார்.