மேற்கு மண்டலத்தின் 39 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி - செந்தில் பாலாஜி சூளுரை
மேற்கு மண்டலத்தின் 39 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என செந்தில் பாலாஜி சூளுரைத்துள்ளார்.
திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு
திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மேற்கு மண்டல மாநாடு கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்றது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களின் 39 தொகுதிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மேற்கொண்டிருந்தார்.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
மாநாட்டிற்கு கழக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ. ராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செந்தில்பாலாஜி வரவேற்புரை
கரூர் திமுக மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி வரவேற்புரையாற்றினார்.

இதில் பேசிய அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் இந்த மேற்கு மண்டலம் திமுகவின் எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் வந்திருக்க கூடிய இந்த இளஞ்சிங்கள் மிகச்சிறப்பாக தேர்தல் களத்தில் பணியாற்றி,. மேற்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்று இளைஞரணி செயலாளர் மூலம் இந்த வெற்றியை கழகத்தின் கரங்களில் சமர்ப்பிக்க இந்த நிர்வாகிகள் சந்திப்பு வாயிலாக சூளுரைத்து அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்போடு வரவேற்று இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு துணை முதல்வருக்கு நன்றியை தெரிவித்து உரையை நிறைவு செய்கிறேன் என பேசினார்.
மக்களுக்கு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், " இந்தியாவிற்கே வழி காட்டும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். பாஜகவிற்கு எதிரான ஜனநாயக போரை ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என பிற தலைவர்கள் நினைக்கின்றனர்.
ஆட்சியை பொறுத்தவரை ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். மேலும், மகளிர் உரிமை தொகையினை 2,000 ஆக உயர்த்தபடும் என்ற வாக்குறுதியையும் முதல்வர் கொடுத்துள்ளார்.

பாஜக அடிமை கூட்டம் நீதிமன்றம் மூலம் மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயன்றனர். அதை தெரிந்துக்கொண்ட முதல்வர் முன்கூட்டியே பணத்தை அளித்தார். காலை 7 மணிக்கு 5,000 பணம் அக்கவுண்டில் வந்தவுடன், மக்கள் 9 மணிக்குள் பணத்தை எடுத்து விட்டனர்.
மத்திய அரசின் மீது மக்களுக்கு அவ்வளவு பயம் இருக்கிறது. மோடி டி.வியில் வந்தாலே மக்கள் பயப்படுகின்றனர். ஸ்டாலின் வந்தால் மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர். இது தான் நம் ஆட்சிக்கும், சங்கி கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். மக்களிடம் உள்ளவற்றை பிடுங்குவது பாஜ ஆட்சி. மக்களுக்கு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி.
எம்.ஜி.ஆர் படம் திரையரங்கில் பார்த்து பழனிசாமி கண்ணீர் விட்டார். எம்.ஜி.ஆர் இன்றைக்கு உயிரோடு இருந்தால், என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டாயே என பழனிசாமியை நினைத்து அழுதிருப்பார்.
2019ல் அதிமுகவை பாஜவுக்கு அடகு வைத்த பழனிசாமி, 2021ல் அதிமுகவை பாஜவுக்கு லீசுக்கு விட்டார். 2026ல் அதிமுகவை பாஜவுக்கு விற்று விட்டார்.
தன் சுயநலத்தால் பழனிசாமி, அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.
அரசியலில் நாம் முரட்டு பக்தர்கள், முரட்டுத் தொண்டர்களை பார்த்திருப்போம். ஆனால், பிரதமர் மோடிக்கு முரட்டு அடிமையாக பழனிசாமி மாறியுள்ளார்.மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து நடக்கும் மிரட்டல்களுக்கு, தலைவர் மதுரையில் தெளிவாக பதில் கூறிவிட்டார். வழக்கு போடட்டும், பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறிவிட்டார்.
நாங்கள் ED -க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். உயிரே போனாலும், சுயமரியாதையை விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தர மாட்டோம்.
தற்போது நடக்க உள்ளது 8 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராகும். இளைரணி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தலைவர்களிடம் கேட்டு இருக்கிறேன்.
இன்று பல பேர் நம்மை அழிக்க கனவு காண்கின்றனர். ஆனால், ஆயிரம் உடன் பிறப்பு இருக்கும் வரை நாம் வளர்ந்து கொண்டே இருப்போம். யாரும் அழிக்க முடியாது. உதய சூரியன் ரத்ததில் ஊறிய சின்னம், எத்தனை பேர் வந்தாலும் அதை அழிக்க முடியாது" என பேசினார்.