அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - அவர் என்ன சொன்னார் தெரியுமா?
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும்,
அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும்,
அதிமுக அறிவிப்பு
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.