தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை? செல்வப்பெருந்தகை விளக்கம்
தவெக உடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் பேசிவருவதாக வெளியான தகவலுக்கு செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
தவெக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் வைத்து கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தி வருகிறது.
திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் கடந்த சனிக்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பு 40 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், கடந்த முறை வழங்கப்பட்ட 25 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என திமுக தரப்பில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வழங்கும் 25 தொகுதிகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் பேசியுள்ளார்.

இதனால், விஜய்யின் தவெக உடனும் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் பேசிவருவதாக தகவல் வெளியானது.
முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர்.
செல்வப்பெருந்தகை
இந்நிலையில், தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இத்தகைய தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை.காங்கிரஸ் புறவாசல் வழியாக அரசியல் பேசும் கட்சி இல்லை. தவெக அல்லது வேறு எந்த புதிய கட்சி உடனும் காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசவில்லை.
கட்சியின் மாநில தலைவர் நான்தான் தவெகவுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி பேச சொல்லி தேசிய தலைமை எனக்கு எந்த வழிகாட்டுதலையும் தரவில்லை" என தெரிவித்துள்ளார்.