அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுக்கு..என்ன ஆதாரம் -செல்வப்பெருந்தகை பதிலடி!
தமிழ்நாடு அரசின் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது அறிக்கை வழி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 46,760 கோடி. ஒன்றிய அரசு நாடு முழுவதற்கும் கடந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 78,572 கோடி. ஆனால், புதிய கல்விக் கொள்கையையும்,
மும்மொழி திட்டத்தையும் ஏற்க மறுத்த காரணத்தால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2,152 கோடியையும், பி.எம்;.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2,000 கோடியையும் ஒதுக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்கிற குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அந்த தொகையை ஒன்றிய அரசு பாரபட்சமாக திருப்பி விட்டிருக்கிறது.
கடும் புயலினால் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 38,000 கோடி நிவாரண தொகை கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதினார்.
அதற்கு பலனளிக்காத நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம் 200-ன்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் பங்காக வர வேண்டிய ரூபாய் 276 கோடியை தான் ஒன்றிய அரசு விடுவித்ததே தவிர,
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சல்லிக்காசு கூட விடுவிக்கவில்லை.தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில் கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கை எதிர்கொள்கிற வகையில், தன் சொந்த நிதியிலிருந்து கல்வித்துறை உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மிகுந்த துணிவுடன் மேற்கொண்டு வருகிறது.
எனவே, தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது.இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு கொடுத்த வாக்குறுதியையும்,
சட்டப் பாதுகாப்பையும் மீறி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்கிற முயற்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிற அண்ணாமலைக்கு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். தமிழ்நாடு பட்ஜெட் சமர்ப்பித்ததன் மூலம்,
மக்களின் அமோக ஆதரவை சீர்குலைக்கும் நோக்கத்தில், அதே நாளில் அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து அவதூறு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? ஏதாவது ஆதாரம் இருந்தால் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர,
அதற்கு முன்பாகவே அமலாக்கத்துறையின் அறிக்கை ஊடகங்களின் மூலம் வெளியிடுவதற்கு அண்ணாமலை ஒரு தூண்டு கோலாக அமைந்திருக்கிறார்.வருமான வரித்துறை,
அமலாக்கத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்கள் நலன் சார்ந்த, மக்களின் பேராதரவுடன் செயல்படுகிற மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை சீர்குலைக்க எத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகள் எடுத்தாலும் அதில் அண்ணாமலை வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.