கலைஞரின் பேரன் வேறன்ன பேசுவார்...உதயநிதிக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ்
சனாதன விவகாரத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டானிக்கு ஆதவராக= காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதயநிதி சனாதன சர்ச்சை
அமைச்சர் உதயநிதி அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது, டெங்கு, மலேரியா போன்ற சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து இந்துத்துவ அமைப்புகளும், பாஜக கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கலைஞரின் பேரன் வேறன்ன பேசுவார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பினால் அனைவரும் சமம்; மக்கள் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்று அய்யன் வள்ளுவர் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீமத் பகவத் இராமானுஜர் அவர்கள், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை உபதேசித்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தக் கருத்துக்கள் குறித்துதான் பேசினார். திருவள்ளுவர், ஸ்ரீமத் பகவத் இராமானுஜர் ஆகியவர்களை நாங்கள் தான் கொண்டாடுகிறோம் என்று வேஷம் போடும் பா.ஜ.க.வினர் இன்று அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பது ஏன்?
மேலும், சனாதான தர்மமோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்று கூறுகின்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக வேண்டுமென்றுதான் மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அழுத்தமாகப் பேசினார்.அவர் பேசியதில் ஒன்றும் தவறில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன், இதைவிட வேறென்ன பேசமுடியும்.
தமிழ்நாட்டு மக்கள் தீண்டாமை மற்றும்; வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்கள். அவர்களுக்கு ஆன்மீகத்திற்கும் மத பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். இந்தப் புரிதலை பா.ஜ.க.வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் நம்பிக்கைக் கொண்ட சனாதானவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது.
சமீபத்தில் எங்கள் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அதானி குறித்த முறைகேடுகள், ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG of India) வெளியிட்ட ஒன்றிய அரசின் முறைகேடுகள், பா.ஜ.க.வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற 'இந்தியா' கூட்டணியின் நடவடிக்கைகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற மதஅரசியலை பா.ஜ.க.வினர் கையில் எடுத்திருக்கின்றனர். இவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.