அதிமுக மாநாடு நடத்தும் நேரத்தில் திமுக போராட்டம் நடத்துவது தரக்குறைவான செயல் - செல்லூர் ராஜூ
அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில், திமுக நீட் தேர்வுக்காக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது தரக்குறைவான செயல் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக மாநாடு
வரும் 20-ஆம் தேதி அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் மும்முரம் காட்டி வரும் நிலையில், அதே நாளில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.
செல்லூர் ராஜு கண்டனம்
இந்நிலையில், திமுகவின் இந்த முடிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை என குறிப்பிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என சுட்டிக்காட்டி பேசிய அவர், மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள், என்றும் திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.