சென்னையில் அமரர் ஊர்தி சேவை அதிகரிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
கொரோனாவால் மரணிக்கும் உடல்களை எடுத்துச் செல்ல கூடுதல் அமரர் ஊர்திகளை இயக்கும் நடவடிக்கையை எடுத்துள்ள தமிழக அரசு, கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பெரிஃபெரல் மருத்துவமனையை அவர் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக சிகிச்சைப் பணிகளை மேம்படுத்துவது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு, ”14 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையை முழுவதுமாக நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 75 படுக்கை வசதி கொண்ட பெரம்பூர் பெரிஃபெரல் மருத்துவமனை, 100 படுக்கைகள் கொண்ட வசதியுடன் மேம்படுத்தப்படும்.
மருத்துவமனையில் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளும் மூன்று வாரங்களில் முடிக்கப்படும். தற்போதுள்ள 35 ஆக்சிஜன் படுக்கை வசதியை முதற்கட்டமாக 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளோடும் பின்னர் 100 செறிவூட்டிகளோடும் கொண்ட படுக்கைகளுடன் மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 100 அமரர் ஊர்திகள் உள்ளது. கடந்த நான்கு நாட்களில் அதன் சேவை 25 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அமரர் ஊர்தி தட்டுப்பாடு இல்லை எனும் நிலையை உருவாக்குவோம்.
கொரோனாவுக்கான கூடுதல் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள், லயோலா கல்லூரி, ஈஞ்சம்பாக்கம், பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி மற்றும் 136 படுக்கைகளுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடனடி செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.