கமலின் பத்தல பத்தல பாடல் கருத்துக்களுக்கு சீமான் ஆதரவு..!
நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்காக எழுதியும் பாடியுள்ள பத்தல பத்தல பாடலின் கருத்துக்களை ஆதரிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசை விமர்சித்து கமல் எழுதியுள்ள பாடலை தான் ஆதரிப்பதாகக் கூறினார்.
ஒன்றிய அரசு எதில் சரியாக இருக்கிறது என கேள்வி எழுப்பிய சீமான், பாடலில் உள்ள கமலின் கருத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ரணில் பிரதமராகி இருப்பதால், அந்த நாட்டின் பொருளாதார சிக்கல் தீர்ந்துவிடாது என கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டது போன்ற நிலைமை, இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருப்பவர்களை இந்து என்றும், தமிழர் என்றும் கூறும் மத்திய மாநில அரசுகள், இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்த மக்களுக்கு இதுவரை ஏன் குடியுரிமை வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் செய்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவதை தான் மறுக்கவில்லை என்றும், பத்தாண்டுகளில் அடிக்க வேண்டிய கொள்ளையை ஒரே ஆண்டில் முடித்துவிட்டதாகவும் சீமான் குற்றம் சாட்டினார்.
சசிகலா அரசியலை விட்டு விலகிப் போவதை தான் விரும்பவில்லை என தெரிவித்த சீமான், அவர் அரசியலில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகக் குறிப்பிட்டார்.