பாஜகவை பின்பற்றும் திமுக - அதிமுக உண்ணாவிரதத்துக்கு ஆதரவளித்த சீமான்
அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவளித்துள்ளார்.
அதிமுக உண்ணாவிரதம்
கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் மற்றும் சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீமான்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின்
இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.