இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க போகிறது திமுக : கொந்தளித்த சீமான்
இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில், அதுவும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் சூடு பிடித்தது இந்த இணைய வழி சூதாட்ட விளையாட்டு , விளையாட்டினை தொடங்கும் போது பணம் ஈட்டி லாபத்தை கொடுக்கும் வகையில் இருப்பதால் பல இளைஞர்கள் கடன் வாங்கி இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாக பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றவர்கள் பலர்.

தொடரும் தற்கொலைகள்
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலியை சேர்ந்த பவானி என்ற பெண் இணைய வழி சூதாட்டத்திறகு அடிமையாகி இலட்சக்கணக்கில் பணத்தினை இழந்துள்ளார், இதானால் விரக்தி அடைந்த பவானி தற்கொலை செய்துகொண்டார்,இந்த நிகழ்வு தமிழகத்தில் அதிரவலையினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பவானி தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில் :
"சென்னை மணலியைச் சேர்ந்த தங்கை பவானி இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
காலம் கடத்தும் திமுக
இணையவழி சூதாட்டங்கள் விரைவில் தடைசெய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து ஐந்து மாதங்களாகியும், இதுவரை தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கே தற்போது தாய் பவானியை இழந்து அவரது இரு குழந்தைகள் பரிதவிக்க முதன்மை காரணமாகும்.
குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது.
பாதை மாறும் இளைஞர்கள்
இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையிலிருந்து இளைய தலைமுறையினரைத் திசைமாற்றுகிறது.
மேலும், நேர்மை, உண்மை, துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது என்பதும் வலிமிகுந்த உண்மையாகும்.
இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது ?https://t.co/QAek1wAMZ3@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/vaQ5Q0LQq8
— சீமான் (@SeemanOfficial) June 7, 2022
இதனை உணர்ந்தே நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.