திமுக அரசின் அட்டூழியங்களை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் - தவெகவிற்கு ஆதரவாக சீமான்

Seeman Tamil Nadu Police Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 28, 2025 11:11 AM GMT
Report

 த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய் கண்டனம்

சென்னை வியாசர்பாடி முல்லை நகர்ப் பகுதியில் 26.05.25 இரவு அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றனர்.

vijay tvk

அப்போது தவெக பெண் நிர்வாகிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

காவல்துறை மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக காவல்துறை, "வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் போலீசாரால் யாரும் தாக்கப்படவில்லை. கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். 

வியாசர்பாடி சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையரை நியமித்திருக்கிறோம்" என விளக்கமளித்துள்ளது.

சீமான் கண்டனம்

இந்நிலையில், தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

seeman ntk

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு செய்யும் சேவர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன்?

மனச்சான்றற்ற கொடுஞ்செயல்

உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். திமுக அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதை தட்டிகொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி, தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். 

சீமான்

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா?

திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுதைக்கூட தடுத்து தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.