இந்தியா கூட்டணியில் வலிமையானவர் ஸ்டாலின்தான் - சீமான் புகழாரம்
இந்தியா கூட்டணியில் வலிமையானவர்முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என சீமான் பேசியுள்ளார்.
நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக மாநாடு
திருச்சியில் வரும் 21ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் 234 தொகுதி வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்ய உள்ளார்.

மாநாட்டு பணிகளை பார்வையிட வந்த சீமான் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க ஸ்டாலின் தான் தகுதியான நபர் என முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வலிமையானவர் ஸ்டாலின்
இதற்கு பதிலளித்த சீமான், "இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸுக்கு இந்த வலு இல்லை.

மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும். ஏற்கனவே மம்தா பானர்ஜி வெளியேறி விட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தேர்தலை தனித்தே சந்திக்கின்றனர்.
ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்? இந்தியா கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்" என கூறியுள்ளார்.