ராமர் இருப்பது உண்மை தான் - சீமான் சொன்ன விளக்கம்

Seeman
By Karthikraja Jul 03, 2024 07:41 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

இடைத்தேர்தல்

அப்போது மேடையில் பேசிய சீமான், “நம் நாடு ஏழ்மை வறுமையில் சிக்கித் தவிக்கிறது. இங்கே அடிப்படையே தவறாக இருக்கிறது. இன்று பதவியில் உள்ளவர்கள், தாங்கள் வகிக்கும் பதவியை நிரந்தரம் என்று நினைக்கிறார்கள். சேர சோழ பாண்டியன், முகலாயர், பிரிட்டிஷ் போன்ற சாம்ராஜ்யங்களே வீழ்ந்து போய் விட்டன. எனில், நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவில்லை. வேட்டி, சேலை, மூக்குத்தி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி கொள்கிறார்கள். 

vikravandi seeman speech

இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று. அமைச்சர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இத்தொகுதியை முற்றுகையிட்டு பல கோடிகளை வாரி இறைத்து வெற்றியை பெறுகின்றனர்.நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது வேலைவாய்ப்பை பெருக்க, அவரவர் வாழ்விடத்தில் தொழிற்சாலை அமைக்கப்படும்.

தாய் மொழி

உதாரணமாக பனைமரம் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலை அமைத்து கருப்பட்டி, கற்கண்டு, பனைவெல்லம் உள்ளிட்ட பனைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதில் எந்த செயற்கை ரசாயனமும் சேர்க்காமல் தயாரித்து இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். 

vikravandi seeman speech

கலப்படத்தை விரும்பாத நம் மக்கள் நம் தாய் மொழியில் கலப்படம் அடைந்த சமூகமாக மாறி வருகின்றனர். அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மனுநீதி சோழன் மாட்டுக்கும் நீதி கொடுத்தவன். தமிழன் யாரையும் அடிமைப்படுத்தி வாழ்ந்தவன் இல்லை. சேர சோழ பாண்டியர்கள் கூட, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை பிடித்து கொடி நட்டு கப்பம் மட்டும் கட்டினால் போதும் என்று தாய் நாட்டிற்கு வந்து விடுவார்கள்.

ராமர் கோவில்

சாதி மதம் சாமி பற்றி பேசும் அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாஜக சாமி சாதியை பற்றி தான் பேசும். அவசர அவசரமாக ராமர்கோவிலை தேர்தலுக்கு முன் திறக்க என்ன தேவை வந்தது? பாதியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை மோடி திறந்தார். இப்போது மழையில் ஒழுகுகின்றது. 

மக்களுக்கு இறை மீது உள்ள நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற முயற்சிக்கிறார். அயோத்தி தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை நிறுத்தி வெற்றி பெற வைத்து மோடிக்கு பெரும் தோல்வியை கொடுத்துள்ளார் அகிலேஷ் யாதவ். இதையெல்லாம் பார்க்கும்போதுதான் உண்மையில் ராமர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வருகிறது.

மாட்டு இறைச்சி

பாகிஸ்தான் பக்கத்து நாடாக இல்லாமல் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா நாடு போல வெகு தொலைவில் இருந்திருந்தால் இவர்கள் அதை வைத்து அரசியல் செய்ய முடியாது. மாடு மாடு என்று பாஜக பேசுகிறது. ஆனால் இன்றைய தேதியில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ஏற்றுமதி செய்து மற்றவர்கள் சாப்பிட்டால் தர்மம், நம் நாட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டால் அடித்து கொல்ல வேண்டுமா?

ஆடு மாடு கோழிக்கு மருத்துவம் பார்ப்பவர், அரசு விலங்கியல் மருத்துவர் என்றால், ஆடு மாடு கோழி வளர்ப்பவர் அரசு ஊழியர் இல்லையா? சாப்பாடு போடும் விவசாயிகள் அரசு பணியாளர் கிடையாது, ஆனால் மதுபானம் ஊற்றி கொடுப்பவர் அரசு ஊழியர். இதற்கு நாம் அவமானப்பட வேண்டும்.