கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை ஓடோடி சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?- கொந்தளித்த சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சீரழிக்கும் திராவிட கட்சிகள்
தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் காமராஜர் செய்த ஆட்சி சாதனையின் கால் தூசி அளவாவது செய்திருப்பார்களா?. இலவசங்களால் நாட்டை சீரழித்து வைத்துள்ளனர். கடற்கரையை கல்லறை ஆக்கி வைத்துள்ளனர்.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி, படித்த மாணவிகளுக்கு ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் கேட்கவில்லை, ஆனால் அறிவித்தார்கள்.
ஏன் ரூ.10 லட்சம்
ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்கள் பணி செய்து மக்கள் நல பணியாளர் 13,000 பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு, குடிக்காதவர்களின் பணத்தை எடுத்து ரூ. 2 கோடியே 10 லட்சம் வழங்கியுள்ளார்கள்.

.கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம். இது போன்று ராணுவ வீரர்களுக்கு இவர்கள் உதவி செய்யவில்லை ஏன்?.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது உதவி செய்யவில்லை ஏன்? கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களை ஓடோடி சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவர்களுடைய நடவடிக்கையால் இனி வேலை வெட்டிக்கு போகாதவர்கள் குடித்து செத்தால் ரூ. 10 லட்சம் கிடைக்கும் என குடிப்பார்கள், அப்போது என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.