தமிழகத்திற்கு நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழேதான் பாஜக - சீமான் ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தலால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதற்கான கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "உரிய நேரத்தில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காத நிலையால் தான் விவசாயி தற்கொலை நடந்துள்ளது. மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் தரவில்லை.
வலிமை மிக்க இந்திய அரசு ஏன் நமது மீனவர்களை பாதுகாக்கவில்லை. நம் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே தவறாக உள்ளது, நட்பு நாடு என கூறிக்கொண்டு நமது மீனவர்களை கொன்றுகுவிக்கும் அவர்களுக்கே ஆயுதம் மற்றும் பயிற்சிகளை வழங்கிவருகிறது. தமிழ்நாடு தமிழகம் தான் இருக்கவேண்டும், இந்தியாவாக மாறக்கூடாது.
தமிழகத்தில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள், அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். இந்தியாவில் கூட்டாச்சி தத்துவம் என்பது நடந்தேற வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்னேற்ற பாதையில் செல்கிறது. மத்திய பட்ஜெட்டே அல்வா தான். வேல்யாத்திரை தொடங்கியது நாங்கள் தான், தமிழகத்திற்கு நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழேதான் பாஜக, சசிகலா நல்ல உடல்நலத்துடன் மீண்டுவர வேண்டும்" எனக் கூறினார்.