மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதல்வர் நாளை மதுரையில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ள நிலையில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இன்று தனி விமானம் மூலம் மதுரைக்கு வரும் முதல்வர் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயாராகி வரும் சிறப்பு வார்டை ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஆலோசனை கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கு உள்ளிட்ட பகுதிகளில் வெடி குண்டு நிபுணர்கள் வெடி குண்டு சோதனை செய்யும் கருவியுடன் சோதனை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.