எதுக்கு உங்களுக்கு 2 லேப்டாப் ? நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய மத்திய தொழிற்படை போலீசார்

chennai Airport debate ministerpalanivelthiagarajan
By Irumporai Sep 30, 2021 07:22 AM GMT
Report

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி செல்வதற்கு வந்தாா். அப்போது பாதுகாப்பு சோதனை பிரிவில் அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவர் பரிசோதித்தாா்.

அமைச்சரின் கைப்பையில் 2 லேப்டாப்கள் வைத்திருந்தாா். அதை பாா்த்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா்,அமைச்சரிடம் 2 லேப்டாப்களை ஏன் எடுத்துச்செல்கிறீா்கள்? என்று கேட்டாா்.

உடனே அமைச்சா் நான் மாநில நிதி அமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்து செல்கிறேன். விமான நிலையத்தில் 2 லேப்டாப்கள் எடுத்து செல்ல கூடாது என சட்டம் உள்ளதா என்றாா். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து அமைச்சரும் வாக்குவாதம் செய்தாா். மேலும் அந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அமைச்சரும் இந்தியில் வாக்குவாதம் செய்தாா். 2 லேப்டாப்களை நீங்களே வைத்து கொள்ளூங்கள். விமானத்திற்கு நேரம் ஆகிறது என கூறி செல்ல முயன்றார்.

இதுகுறித்து தகவலறிந்த விமானநிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினா். அப்போது அமைச்சா், அதிகாரிகளிடம் பயணிகளுக்கு உதவி செய்ய தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனா்.

அவா்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவா் 2 லேப்டாப் விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்று எதாவது விதிமுறை உள்ளதா என்று கேட்டாா். அதற்கு அப்படி எந்த விதிமுறையும் கிடையாது என்று கூறி நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டனா்.

அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டாா். அமைச்சா் சமாதானமாகி விமானத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றாா். இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவா் திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு சோதனை பிரிவில் மொழி பிரச்னை செய்தாா். அது பெரும் சா்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது