‘’முதல் பாதியில் விளையாடியது முக்கியமில்லை ‘’ - ராஜஸ்தான் ராயல்ஸ் ஷம்சி கருத்து
ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் (நாளை) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்த நிலையில் , பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி கூறியதாவது:
ஓர் அணி முதலிடத்தில் உள்ளதோ, 5-வது இடத்தில் உள்ளதோ, போட்டியின் முதல் பாதியில் எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை. 2-ம் பாதியில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமும் மாறும். நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ள ஓர் அணி நன்றாக விளையாடும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். அணி வீரர்களுடன் நன்குப் பழகி அந்த மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முயற்சி செய்வேன்.
ஷார்ஜா மைதானத்தின் அளவு சிறியதாக இருப்பது பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளிக்கக்கூடியது. அதேசமயம் இதைப் பயன்படுத்தி சிக்ஸர் அடிக்க பேட்ஸ்மேன்கள் முயற்சி செய்வார்கள். இதனால் விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். ஷார்ஜா போன்ற மைதானங்களில் 35-40 ரன்கள் கொடுத்தும் அணிக்கு வெற்றி தேடித் தரலாம்.மற்ற மைதானங்களில் 3 அல்லது 4 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். எனவே விக்கெட் எடுப்பது மட்டுமே முக்கியமில்லை என்றார்.
2016 முதல் 2018 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷம்சி, இதுவரை 4 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். தனது சிறப்பான பந்துவீச்சுன் மூலம் தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தவர்ஷம்சி.
இந்த நிலையில்,ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி.