திமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி - ஒரே நாளில் 7 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் SDPI இணைந்துள்ளது.
திமுக கூட்டணியில் SDPI
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
ஆளும் திமுக கூட்டணியில், ஏற்கனவே உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடரும் நிலையில், மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புதிதாக இணைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2024நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட SDPI கட்சி இன்று திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
7 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் வைத்து, டி.ஆர்.பாலு திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்று காங்கிரஸ் உடன் காலையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தரப்பில், கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை , கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
காங்கிரஸ் தரப்பில் 39 தொகுதிகள் வரை எதிர்பார்க்கும் நிலையில், கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் தேமுதிக இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.