மீண்டும் இயங்குமா லேண்டர்,ரோவர்? சந்திரியான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஷாக் தகவல்!
சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்படுமா என்பது குறித்து விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசியுள்ளார்.
பாராட்டு விழா
தமிழ அரசு சார்பில் 'விண்வெளி துறையில்' சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி மற்றும் சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், நிலவில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கருவிகளை மீண்டும் செயல்பட வைப்பது குறித்து பேசியுள்ளார்.
வீரமுத்துவேல் பேட்டி
அவர் பேசியதாவது "நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமை கிடைத்துள்ளது. ரோவரை 100 மீ. தொலைவுக்கு நகர்த்தியுள்ளோம். தன்துருவ பகுதியில் இருந்து நிலவு தொடர்பான ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது.
இந்த தகவல்கள் நிலவைப் பற்றிய எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நாம் எந்த நோக்கத்துக்காக சந்திரயான் 3 திட்டத்தைச் செயல்படுத்தினோமோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் ஆயுட்காலம் என்பது ஒரு முழு நிலவு நாள்தான் (தோராயமாக பூமியின் 14 நாள்களுக்குச் சமம்). அதற்கு மேல் அதிலுள்ள கருவிகளை இயக்குவதற்கான சக்தி இல்லை.
அப்படி இயக்க வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சூரிய ஒளி மின்சக்திதான். இந்த மின் சக்தியைப் பொறுத்தே திட்டத்தின் ஆயுட்கால அளவு உள்ளது. ஆனால், போதிய அளவுக்கு வெப்பம் கிடைத்தால்தான் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். நிலவுப் பகுதியில் வெப்பம் மிகக் குறைவாகவே இருக்கும். அதாவது மைனஸ் 150 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 175 செல்சியஸ் வரை வெப்ப நிலை அளவு இருக்கும்.
இந்த அளவு வெப்பத்தை வைத்து சூரியஒளி மின்சக்தியால் கருவிகளின் இயக்குவது என்பது கேள்விக்குறியாகும். இதனால் தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளைச் செயல்பட வைப்பது சந்தேகம்தான்" என்று வீரமுத்துவேல் பேசியுள்ளார்.