1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலமை செயலகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
அதேசமயம் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதனை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.