பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை முடிந்து 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிற 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் படிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.