தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நேரடி வகுப்புகள் இந்த மாணவர்களுக்கு மட்டும்தான்

school holiday collage
By Nandhini Jan 11, 2022 03:31 AM GMT
Report

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பரவி வரும் ஒமிக்ரான் வகை வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால், நோய் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

வரும் 14 ம் தேதியிலிருந்து 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், வருகிற 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடைபெறும். ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று உயர்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.