உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்..உதயநிதி ஸ்டாலின்
காலை உணவுத் திட்டம்' கீழ் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம்
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 31,008 அரசு பள்ளிகளில் இன்று முதல்-அமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' விரிவுப்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். அத்துடன் அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.
திருவல்லிக்கேணியில் துவங்கிய உதயநிதி ஸ்டாலின்
இந்த திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை துவங்கிய பிறகு அவர் மாணவர்களுக்கு உணவினை பரிமாறியது மட்டுமின்று அவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே இந்த காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.
காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்த அவர், பள்ளிகளின் தலைமை செயலாளர்கள் காலை உணவுத் திட்டம் குறித்து செயலி மூலம் தொடர்ந்து கண்காணிப்பதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்தார்.