ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி: ஆதாரங்களை வெளியிட்டு குற்றச்சாட்டு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதனிடையே ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஒட்டி 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் உடனடியாக ரூ. 18.5 கோடிக்கு ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நிமிடங்களிலேயே ஒரு நிலத்தின் விலை எப்படி ரூ16 கோடிக்கு உயர்ந்திருக்கும்? இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.
உலகில் எந்த ஒரு நிலமும் வினாடிக்கு ரூ5.5 லட்சம் விலை உயர்ந்தது கிடையாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டோரை சிறையில் அடைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் கூறியுள்ளார்.