டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை அறிகையை எஸ்.பி.வேலுமணியிடம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையின் நகலை எஸ்.பி.வேலுமணியிடம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது எஸ்.பி. வேலுமணி தன்னுடைய சகோதரர்கள், உறவினர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இது தொடர்பாக விசாரணை சென்னை உயர்நீதிமன்ரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 10 வாரத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக, டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்பி வேலுமணியிடம் வழங்குவோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, முதற்கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடரலாம் என்றும் தெரிவித்தது.
மேலும், எஸ்.பி.வேலுமணி கேட்டதற்கு இணங்க, விசாரணை அறிக்கையின் நகலை அவரிடம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.