“யூடியூப் வைத்துக் கொண்டால் எது வேண்டுமானாலும் பேசலாமா?” - சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி
யூடியூப் வைத்துக் கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாமா என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்,
சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சாட்டை துரைமுருகன் பேசிய விவரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னர் இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, யூடியூப் வைத்துக் கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாமா என கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்பும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த முடியாது என கண்டனம் தெரிவித்தார்.
சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையையே தன்னால் படிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
விமர்சனம் மட்டும் செய்யாமல், சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் எதையாவது செய்யலாம் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.