விறுவிறுவென நடக்கும் வாக்குப்பதிவு- கடந்த தேர்தலை விட 5% குறைவு - சத்யபிரதா சாகு பேட்டி!
தமிழகத்தில் இன்று காலையிலிருந்து சட்டமன்றத் தேர்தல் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவித்ததும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் முழு வீச்சில் களமிறங்கி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறந்தது. பின்னர் கடந்த 4ம் தேதி பிரச்சாரம் இரவு 7 மணியோடு நிறைவடைந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்று காலை சரியாக 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், நடிகர் மற்றும் நடிகைகளும் தங்களது ஜனநாயக கடமையை செயலாற்றி வருகிறார்கள்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாவது - தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80%வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 20.23%, குறைந்தபட்சமாக நெல்லையில் 9.93% வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னையில் 10.58% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சென்ற நடந்த தேர்தலை ஒப்பிடும் போது காலை நிலவரத்தின் வாக்குப்பதிவு 5% குறைவு தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.