சாத்தான்குளம் வழக்கு.., குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கோரி சிபிஐ வாதம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கோரி சிபிஐ வாதம் முன்வைத்துள்ளது.
வணிகர் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், மீதமுள்ள 9 காவலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

இதனால், 9 காவலர்களும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தண்டனை குறித்து இன்று நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.
சிபிஐ தரப்பில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள், "கொலை செய்யும் நோக்கம் இல்லை. 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விவரங்களை ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.