சசிகலா எனக்கு அம்மா போன்றவர்.. நான் அவருக்கு மகள் போன்றவள் - விஜயசாந்தி பளீச்
நான் எப்போதெல்லாம் சென்னை வருகிறோனோ அப்போதெல்லாம் சசிகலாவை சந்திப்பேன். ஏனென்றால் சசிகலா எனக்கு அம்மா போன்றவர் என்று விஜயசாந்தி கூறியுள்ளார்.
தஞ்சையில் 12ம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாஜக எம்.பி. சந்தியா ராய், முன்னாள் எம்.பி.யும் தேசிய செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமித்துள்ளது. இதனையடுத்து, இந்த குழு அரியலூர், தஞ்சாவூருக்கு நேற்று சென்று விசாரணையை தொடங்கியது.
இப்பணிகளை முடித்து விட்டு விஜயசாந்தி சென்னை திரும்பினார். இதனிடையே விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு விஜயசாந்தி பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது -
நான் எப்போது சென்னை வந்தாலும் சசிகலாவை சந்திப்பேன். சசிகலா எனக்கு அம்மா போன்றவர். நான் அவருக்கு மகள் போன்றவள். அம்மாவை பார்க்க வந்தேன். இது அரசியல் சந்திப்பு கிடையாது. அரசியலில் யார் யார் நல்லது செய்தார்களோ கண்டிப்பாக அவர்களுக்கு நல்லது நடக்கும். தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழகத்திற்கு நல்லது நடந்திருக்கும்.
இப்போதும் அது தான் என் மனதில் இருக்கிறது. ஜெயலலிதாவை போல தான் சசிகலாவும். ஜெயலலிதா, சசிகலா என இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். வருங்காலத்தில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அரசியலில் எதுவும் நடைபெறலாம். இது நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.