சசிகலாவின் அதிரடியான திட்டம் இது தானா? புதிய முடிவால் நடக்கப்போவது என்ன?
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு அமமுகவினர் ஆடம்பரமான வரவேற்பு அளித்தனர். சசிகலாவின் வருகை அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டு வந்தன. ஆனால் சசிகலா கடந்த 10 நாட்களாக மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஓய்வில் இருந்து வருகிறார்.
நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சசிகலாவின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் நடத்திய கூட்டம் செல்லாது என ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார் சசிகலா.
பெங்களூருவில் இருந்து கிளம்பிய போதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே வாகனத்தில் அதிமுக கொடியுடன் சசிகலா பயணத்தை தொடங்கினார். தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பு மற்றும் இரட்டை இலைக்கு உரிமை கோர புதிய வழக்கை சசிகலா தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.