கழக உடன்பிறப்புக்கள் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாக நான் நினைக்கிறன் : கொந்தளதித்த சசிகலா .

sasikala admk
By Irumporai Dec 05, 2021 06:56 AM GMT
Report

கழகத்தினர் ஒற்றுமையுடன் இருந்தால்தான், எதிரிகளை வெல்லமுடியும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனை படுகிறது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போது தான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும். எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஒழிய, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.

ஓமபொடி பிரசாத் சிங் புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர். அதுமட்டுமல்ல பிரசாத் சிங் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்தபின்னர் திருமணம் செய்து கொண்டவர்.

மேலும், புரட்சித்தலைவர் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் பிரசாத் சிங், முசிறிப்புத்தன் ஆகியோரை திமுகவினர் தாக்கியதை பார்த்தவுடன், திமுகவுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றி கண்டார்.

அதே போன்று, எளிய தொண்டரான பி.ராஜேஷ் இன்றைக்கு தலைமைக் கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புக்களின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன்.

ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

தொண்டர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் என் மீது விழுந்த அடி , அறிக்கையில் கொதித்த சசிகலா பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க. நன்றி வணக்கம்.

என்றும் அம்மாவின் வழியில்” என அறிக்கை வெளியிட்டு வி.கே.சசிகலா கழகப்பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் நேற்றைய தினம் ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்கு முன்னதாக வேட்பு மனு வாங்க வந்த இருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் அவர்கள் அதிமுகவே இல்லை என்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என முயற்சி நடக்கிறது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.