மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே திமுகவின் வேலை : கொந்தளித்த சசிகலா

V. K. Sasikala
By Irumporai May 18, 2022 05:29 AM GMT
Report

 தமிழ்நாடு முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் சசிகலா நேற்று ,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

அதன் ஒரு பகுதியாகச் சிவகங்கை அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வீரமங்கை வேலுநாச்சியாரின் வாரிசு தாரர்களான ராணி மதுராந்தகி நாச்சியார் வி.கே.சசிகலாவிற்கு வரவேற்பு அளித்தார்.

அதன் பின்னர் சிவகங்கை பையூர் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியார் நினைவிடம் வந்து அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் வீரத்தாய் குயிலியின் நினைவு தூணிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இணைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். அதுவும் மக்கள் ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.

பின்னர் திமுகவின் ஓராண்டு சாதனை குறித்த கேள்விக்கு திமுகவினர் சாதனை என சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் மக்கள் அதுபோல் நினைக்கவில்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர்.

வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு சசிகலா மரியாதைவீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு சசிகலா மரியாதைஇந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும் என தெரிவித்ததுடன் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள்.

ஆனால் ஒன்று கூட செய்யவில்லை, சொல்வதெல்லாம் நன்றாகச் சொல்கிறார்கள். ஆனால் செய்கை என்பது சரியாக இல்லை. எதுவும் செய்ய வில்லை என கூறினார்.மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காகப் போராடும் அரசு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு அதை செய்ய வேண்டும்.

அவர்களே தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் கண்டும் காணாததுபோல இருப்பது எப்படி என கேள்வி எழுப்பினார்.

ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடைபெறுவது குறித்த கேள்விக்கு அது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்ததுடன் மாநில அரசை மத்திய அரசு நசுக்குவதாக மாநில அரசு கூறிவரும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அம்மா இருக்கும்போதும் வேறு அரசு தான் மத்தியில் இருந்தது.

ஆனால் அவர் இதுபோல் குறை கூறியது இல்லை என்றும் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதைத் தீவிரமாகக் கேட்டு பெற்றுக்கொடுத்தார். அதுபோல் திமுக செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை என்றும் ஓர் ஆண்டு கடந்துவிட்டது.

மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அதை விடுத்து மத்திய அரசை குறைகூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள் என்றும், இவர்கள் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும்.

வெறுமென பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறிப் பேசலாம்.

ஆனால் ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். என்றும் ஆட்சி முடியும் வரை மத்திய அரசை குறைகூறிக்கொண்டே இருப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.