சசிகலாவின் பலே திட்டம்: கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்
சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, வேகத்தை விட, விவேகம் தான் முக்கியம் என்று இரண்டு முக்கியமான திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் சசிகலா தமிழக அரசியலில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சசிகலா நினைத்தப்படி இப்போது வரை எதுவும் நடக்கவில்லையாம், இதனால் அவர் இரண்டு திட்டங்களை வைத்திருப்பதாக அவரின் ஆதரவாளர் கூறியுள்ளனர். அதில், எப்படியாவது, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக வேண்டும். கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக, சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் தயார் என, சசிகலா முடிவெடுத்துள்ளாராம்.

இப்பணியை மேற்கொள்ள சிலர் தெரிவு செய்யப்பட்டு, காலக்கெடுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. அது நடக்கவில்லை என்றால், இரண்டாவது திட்டமாக, அ.ம.மு.க.,வின் தலைவராக சசிகலா, பொதுச்செயலர் தினகரன் என தேர்தலை சந்திப்பது, 234 தொகுதிகளிலும், அ.ம.மு.க., போட்டி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி என, முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அ.ம.மு.க., வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்சம், 60 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு அடுத்து, இரண்டாவது இடத்துக்கு வர முடியும் என, சசிகலா நினைக்கிறாராம்.

இப்படி, அ.தி.மு.க. அ.ம.மு.க., தனித்தனியாக போட்டியிட்டு தோற்று விட்டால், 1989 சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜெ-ஜா. என இரு அணிகளும், அ.தி.மு.க., என ஒன்றுபட்டது போல, தன் தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாகி விடும் எனவும், சசிகலா கணக்கு போடுவதாக கூறுகின்றனர்.
இந்த திட்டத்தை அறிந்த அதிமுக அமைச்சர்கள் சிலர் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.